தினகரன் 28.06.2010
உணவு பொருட்கள் பின்தேதியிட்டு தயாரிப்பு
கோவை, மே 28: காலாவதி, கலப்படம் தவிர்க்க எதிர்கால தேதியில் உணவு பொருள் தயாரிப்பது ரெய்டில் கண்டறியப்பட்டது.
கோவை மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறியதாவது;
கோவை நகரில் கலப்படம், காலாவதி உணவு பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. ரெய்டு நடத்தியதில் , பல்வேறு வகையான உணவு பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லெட், சிப்ஸ், பப்ஸ், பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகள் பறிமுதல் செய்து குப்பை மோட்டில் அழிக்கப்பட்டது. இந்த பொருட்கள் சிலவற்றின் மாதிரிகள், சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் மற்றும் சேலத்தில் உள்ள உணவு பொருள் பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கோவை நகரில், டவுன்ஹால், ராமநாதபுரம் உட்பட சில பகுதியில் எடுத்த டீத்தூள் ஆய்வு செய்து அதன் முடிவு பெறப்பட்டது. இதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையிலான கலப்பட வேதி பொருள் டீத்தூளில் கலக்கப்பட்டிருந்தது. இதேபோல், சிப்ஸ் உள்ளிட்ட கார வகைகளில் கலப்படம் இருந்தது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்தது.
கலப்பட உணவு பொருள் தயாரித்த நிறுவனம், கடைகளின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். உணவு ஆய்வாளர்கள் மூலம், கோவை நகரில் கலப்பட உணவு பொருள் சோதனை அடிக்கடி நடக்கிறது. இதுவரை காலாவதி, கலப்பட உணவு பொருள் தான் கிடைத்தது. சுகாதார துறையினர் சோதனையில் உஷாரான சிலர், புது வகை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உணவு பொருள் தயாரிக்கும் தேதியை போலியாக குறிப்பிடுகின்றனர். கோவை நகரில் பல இடங்களில் ரெய்டு நடத்தியதில் எதிர்கால தேதி குறிப்பிட்டு பொருட்களை உற்பத்தி செய்திருந்தனர். ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி தேதியை குறிப்பிட்டு தயாரித்த கார முறுக்கு, சிப்ஸ், பேக்கரி வகை பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. நுகர்வோர்களை ஏமாற்றும் வகையில் தயாரித்த இந்த உணவு பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை அழிக்க உத்தரவிட்டிருக்கிறோம். இதுபோல் தேதியை போலியாக குறிப்பிட்டு மோசடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நகர்நல அதிகாரி எச்சரிக்கை