தினமணி 31.05.2010
காலாவதி பொருள் விற்பனை: சூரம்பட்டியில் திடீர் ஆய்வு
ஈரோடு, மே 30: ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதி கடைகளில் காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, சுகாதார அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு சுகாதாரத் துறை துணை இயக்குநர் கோ.ரகுநாதன் உத்தரவின்பேரில், சித்தோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ப.மங்கையர்க்கரசி தலைமையில், உணவு ஆய்வாளர்கள் ந.ராமசாமி, ஆர்.சீனிவாஸ், எம்.பத்மநாபன், துப்புரவு ஆய்வாளர் ராமசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர், சூரம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகளில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை, விலை போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா, பிஸ்கெட்கள், தண்ணீர் பாக்கெட்கள், குளிர்பானங்கள், மளிகைப் பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேதி குறிப்பிடாத மற்றும் காலாவதியான பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.