தினமலர் 01.06.2010
அனுமதியின்றி வெட்டப்படும் ஆடுகள் மாற்று இறைச்சிகளின் புழக்கத்தால் பீதிஉறக்கத்தில் அதிகாரிகள்
ராமநாதபுரம்: அனுமதியின்றி ஆடுகள் வெட்டப்படுவதால் , ஓட்டல்களில் மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் வருவது அதிகரித்து வருகிறது. வறண்ட மாவட்டமாக ராமநாதபுரம் இருந்த போதும், பணப்புழக்கத்தில் மாநகராட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பணம்படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உதயமாகி வருகின்றன. அசைவ பிரியர்கள் நிறைந்த இங்கு, அதை சார்ந்த உணவு விடுதிகளின் எண்ணிக்கையே அதிகம். போதாக்குறைக்கு இரவு நேரங்களில் மாமிசங்களுடன் கூடிய சூப் கடைகள் நிறைய உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் ஆடு இறைச்சிக்கு பதிலாக மாற்று இறைச்சிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆடுகள் அனுமதியின்றி வெட்டப்படுவதே இதற்கு காரணமாகும். நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள ஆடி அடிச்சாலையில் மட்டுமே ஆடுகளை வெட்ட வேண்டும் என்பது வரையறை. இங்கு வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சியில் முத்திரை குத்தப்படும். இதை கொண்டு ஆட்டு இறைச்சியை அடையாளம் காணமுடியும். இங்கோ அவரவர் விருப்பத்துக்கு கடைகளில் ஆடுகளை வெட்டி இறைச்சியை விற்கின்றனர். ஆறு ஆடுகள் வெட்டும் இடத்தில் விற்கப்படுவதோ 10 ஆடுகளின் இறைச்சியாக உள்ளது. வரிசையாக ஆடுகளின் தலையை அடுக்கி வைக்கப்படுவதால் மக்களும் நம்பி ஏமார்ந்து வருகின்றனர். மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் விடுவது ஒருபுறமிருந்தாலும், ஆடுகள் வெட்டப்படுவதை கண்காணிப்பதிலுமா சோம்பேறிதனம் வேண்டும். வருவாயையும் இழந்து, பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற நடவடிக்கையை அனுமதிப்பது ஆபத்தானதாகும். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைப்பதால் சில ஓட்டல்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.