தினகரன் 02.06.2010
ரூ.50லட்சம் ஒதுக்கீடு ‘மேயர் மருத்துவ நிதி’ புதிய திட்டம் துவக்கம்
பெங்களூர், ஜூன் 2: பெங்களூர் மாநகரில் வாழும் ஏழைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ‘மேயர் மருத்துவ நிதி’ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்த மேயர் எஸ்.கே.நடராஜ் முடிவு செய்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏழைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பல பெயர்களில் மருத்துவ நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்கள் மருத்துவ வசதி பெறும் நோக்கத்தில் வாஜ்பாய் ஆரோக்கியஸ்ரீ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மேயர் மருத்துவ நிதி’ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்த மேயர் நடராஜ் முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ.50 லட்சம் இதற்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ள மேயர், இத்திட்டத்திற்கு தொழிலதிபர்கள், தன்னார்வு தொண்டு அமைப்புகளின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளார்.
மேயர் பெயரில் தொடங்கும் மருத்துவ நிதி உதவி திட்டத்தில் மாநகரில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் (பி.பி.எல். ரேஷன் கார்டு) குடும்பங்களை சேர்ந்தவர்களின் நீரிழிவு, சிறுநீரகம், இருதயம் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் உதவி வேண்டுவோர், நேரடியாக மாநகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெற்ற 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட வார்டு சுகாதார அதிகாரியின் பார்வைக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் கூறுகையில், ஏழை மக்களுக்கு சேவை செய்யும் வாயப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி மேயர் மருத்துவ நிதி என்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். இது எனக்கு பின் வரும் மேயர்களும் தொடர வேண்டும் என்பதால், தனிப்பட்ட முறையில் யாருடைய பெயரும் வைக்காமல், பொதுவாக மேயர் மருத்துவ நிதி என்று வைத்துள்ளோம். இது நல்ல பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.