தினகரன் 02.06.2010
கடைகளில் திடீர் ஆய்வு சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்
கீழக்கரை, ஜூன் 2: கீழக்கரையில் உள்ள கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழக்கரை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
கீழக்கரை நகராட்சி கமிஷனர் சுந்தரம், உணவு கலப்பட தடுப்பு அதிகாரி மோகன்ராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் கீழக்கரையில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, காலாவதியான குளிர்பான பாட்டில்கள், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் சுந்தரம் கூறும்போது, கீழக்கரை நகராட்சிக்கென்று கலப்படம் கண்டுபிடிக்கும் அதிகாரி இதுவரை நியமிக்கப்பட வில்லை. விரைவில் நியமிக்கப்படுவார். அதன் பின்னர் அடிக்கடி சோதனை நடத்தப்படும்.
காலாவதியான மருந்து பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது போல், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கும் போதும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும், என்றார்.