தினகரன் 02.06.2010
கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு
திருவில்லிபுத்தூர், ஜூன் 2: திருவில்லிபுத்தூரில் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் நகர் நல அலுவலர் காஞ்சனா, மருத்துவ அலுவலர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடோன்களில் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருந்த 250 கிலோ மாம்பழங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து அழித்தனர்.
மேலும் இறைச்சி கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு கடையில் கெட்டுப்போன 25 கிலோ கோழிக்கறியை கைப்பற்றி அழித்தனர். பள்ளிகளுக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை சம்பந்தமான பொருட்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
இதில் 3 கடைகளில் சிகரெட், பாக்கு, புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த ரூ.ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.