தினகரன் 02.06.2010
மாநகராட்சி நடவடிக்கை கொசு உற்பத்தியை தடுக்க 3,500 ஊழியர்கள் நியமனம்
புதுடெல்லி, ஜூன்2: கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த 3,500 ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி நிலைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்அக்டோபர் மாதம் நடக்க உள்ளன. கொசுக்களால் ஏற்படும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க இப்போதே தயாராக வேண்டும். எனவே கொசு உற்பத்தியை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வீடுகளில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க புதிதாக 3,500 ஊழியர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அவர்களுக்கு மாதம் தலா ரூ.4,100 ஒட்டு மொத்த சம்பளம் வழங்கப்படும்.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.17.22 கோடி கூடுதல் செலவாகும். முதல் 7 மாதம் மாநகராட்சியின் சுகாதார துறையின் கீழ் சம்பளம் வழங்கப்படும். அடுத்த 5 மாதங்களுக்கு மாநகராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.
அவர்கள் வீடு வீடாக சென்று கொசு தடுப்பு மருந்து தெளிப்பார்கள். வீடு வீடாக இவர்கள் செல்வதால் இவர்களை வீட்டு வரி வசூலிக்கவும் பயன்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சியின் சொத்து வரி வசூலை அதிகரிக்க முடியும்.
கடந்த ஆண்டு(2009&10) சொத்து வரியாக ரூ.1400 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 1,157 கோடிதான் வசூலிக்க முடிந்தது.
நிர்ணயிக்கப்பட்டதை விட ரூ.250 கோடி குறைவாக இருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ1,157 கோடி வசூல் ஆனது. டெல்லியில் 22 லட்சம் பேர் சொத்து வரி செலுத்த வேண்டும்.
ஆனால் 9.73 லட்சம் பேர்தான் சொத்து வரி செலுத்தியுள்ளனர். அதுவும் வீடு வீடாக சென்று வசூலித்ததால் இந்த அளவு மாநகராட்சிக்கு சொத்து வரி கிடைத்துள்ளது.எனவே புதிதாக நியமிக்கப்பட இருக்கும் கொசு தடுப்பு ஊழியர்கள் வீட்டு வரி வசூலிக்கும் பணியிலும் ஈடுவடுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.