தினகரன் 02.06.2010
கமலீஸ்வரன் தெருவில் கழிவுநீர் வெளியேற்றம்
அண்ணாமலைநகர், ஜூன் 2: சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி குடிநீர் பைப்பை சுற்றி கழிவுநீர் குட்டை போல தேங்கி நின்றது. இது சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகைப்படத்துடன் தினகரனில் நேற்று செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மாரியப்பன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜாராம், சுகுமாரன் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்று சாக்கடை அடைப்பை சரி செய்து குட்டை போல நின்ற கழிவு நீரை வெளியேற்றி நோய் பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடரை தெளித்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மக்கள் பாராட்டினர்.