தினகரன் 03.06.2010
திருநீர்மலை, முடிச்சூர் உட்பட புறநகரில் 100 பேருக்கு வயிற்றுப்போக்கு கல் வைத்த மாம்பழம் சாப்பிட வேண்டாம்
தாம்பரம், ஜூன் 3: குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம், துர்காநகர், திருநீர்மலை, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் சிலர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மாம்பழ சீசன். மாம்பழங்களைப் பழுக்க வைக்க சிலர் கார்பைட் போன்ற ரசாயனக் கற்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகைய பழங்களை சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாலை ஓரத்தில் விற்கப்படும் பலாப் பழங்கள், மற்றும் ஈ மொய்க்கும் பண்டங்கள், தரமற்ற சிற்றுண்டிகள் முக்கியமாக சுகாதாரமற்ற குடிநீர் போன்றவற்றால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறினர். எனவே காய்ச்சி வடிகட்டிய நீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்
வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில், தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பை அள்ளும் பணி முடு க்கி விடப்பட்டுள்ளது. பல்லாவரம் நகராட்சி ஊழி யர்கள் இந்தப் பணியில் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.