தினமணி 04.06.2010
குடிநீரை காய்ச்சிப் பருக நகராட்சி வேண்டுகோள்
திருவள்ளூர், ஜூன் 3: நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும் என்று திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக 13 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் நகராட்சியின் 27 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நகராட்சியின் குடிநீர் உப விதிகளின் படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் பகிர்மான முறையில் 0.20 பிபிஎம் முதல் 0.50 பிபிஎம் வரை குளோரினேஷன் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் தொற்றுநோய் மற்றும் நீரினால் பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.