தினகரன் 04.06.2010
செம்மொழி மாநாடு கழிவு, காலி உணவு பாக்கெட்களை கொட்ட 660 குப்பை தொட்டிகள்கோவை
, ஜூன் 4: செம்மொழி மாநாட்டுக்காக 660 குப்பை தொட்டி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு கூடம், ஊர்வல பாதையில் இந்த குப்பை தொட்டி பயன்படுத்தப்படும்.கோவையில்
23ம் தேதி உலக தமிழ் செம்மொழி மாநாடு துவங்குகிறது. 5 நாள் நடக்கும் மாநாட்டில் மதிய உணவு பாக்கெட் வழங்கப்படும். 5 நாள் மாநாடு நிகழ்வுகளில் சுமார் 5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 5 லட்சம் பேருக்கு தேவையான உணவு தயாரித்து வழங்க மாநாடு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். உணவு வழங்க 464 உணவு மையம் அமைக்கப்படும். இப்பகுதியில், சாப்பிட்ட பிறகு மீதமான உணவு, பாக்கெட் போன்றவற்றை சேகரிக்க 660 குப்பை தொட்டி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 110 கிலோ, 90 கிலோ, 60 கிலோ கொள்ளளவு கொண்ட என மூன்று வகையான குப்பை தொட்டி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டியில் கருப்பு பேக் வைக்கப்படும். இதில் தான் உணவுகளை கொட்டவேண்டும். மதிய சாப்பாடு நேரம் முடிந்ததும், சேகரமான கழிவுகளை கருப்பு பேக் மூலம் சேகரித்து கன்டெய்னரில் கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் உணவு கழிவுகளை கீழே கொட்ட விடாமல் தடுக்க இந்த முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.வாகன நிறுத்துமிடம்
, அவிநாசி ரோடு வ.உ.சி பூங்கா முதல் கொடிசியா வளாகம் வரை 9 கி.மீ தூரத்திற்கு குப்பை தொட்டி வைக்கப்படும். ரோடு சந்திப்பு, போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் குப்பை தொட்டி வைத்து குப்பைகள் சேகரிக்கப்படும். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் குரங்கு பொம்மை, வாய் திறந்த நீர் யானை, கங்காரு, பறவை, தபால் பெட்டி வடிவத்தில் பிளாஸ்டிக் குப்பை தொட்டி மாடல்கள் வந்துள்ளது. இவற்றில், 3 மாடல்களை மாநகராட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யவுள்ளனர். ஒரு வாரத்தில் குப்பை தொட்டிகள் பெறப்படும். இதற்கு தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோவை மாநகராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட நூற்றுக்கணக்கான குப்பை தொட்டிகளை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.