தினமலர் 09.06.2010
உணவு கலப்பட விதிகள் குறிப்பிடாதபேக்கரியில் உணவு பண்டங்கள் பறிமுதல்
திருநெல்வேலி:உணவு கலப்பட தடைச் சட்ட விதிகள் எதையும் குறிப்பிடாத பேக்கரியில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சுப்பையன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி டாக்டர் கலு.சிவலிங்கம் ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ரத்தினகுமார், பாலபபிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் பாளை., பகுதி கடைகளில் காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது திருவனந்தபுரம் ரோட்டிலுள்ள ஒரு பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் அனைத்திலும் தயாரிப்பு தேதி, உணவுப் பொருளின் பெயர், எடை, விலை விபரம், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, சைவ, அசைவ வகை குறியீடு ஆகிய விபரங்கள் எதுவும் தெரிவிக்காமல் விற்பனை செய்வது தெரியவந்தது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கட், முறுக்கு, கேக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பபட்டது.
ஆந்திரா முறுக்கில் கலர்சுகாதார அதிகாரி எச்சரிக்கை:ஆந்திரா முறுக்கு போன்ற காரவகைகளில் எந்த வகையான செயற்கை வண்ணங்கள் சேர்க்க உணவு கலப்பட விதிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு காரவகைகளில் செயற்கை வண்ணங்கள் சேர்த்து விற்பனை செய்தால் அந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உணவு கலப்பட தடைச் சட்டத்தில் வழக்கு தொடரப்படும் என மாநகராட்சி சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.