தினமணி 09.06.2010
பாளை. யில் பேக்கரி கடையில் திடீர் சோதனை காலாவதியான ரூ.12 ஆயிரம் கேக், பிஸ்கட் பறிமுதல்
திருநெல்வேலி, ஜூன் 8: பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.இதில் அங்கு இருந்த காலாவதியான ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கேக்,பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அந்த பேக்கரி கடையில், மாநகர உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம் தலைமையில் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன்,ரத்னகுமார்,பாலபபிதா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இச் சோதனையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக், பிரட், பிஸ்கட், முருக்கு, ரஸ்க் ஆகிய உணவு பொருள்களில் தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த வேண்டும்,பொருளின் பெயர்,விலை ஆகியவை இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து அழித்தனர். அழிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என கூறப்படுகிறது. அந்தக் கடை நிர்வாகிகளுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இனி இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.