தினகரன் 09.06.2010
குறுகலான தெருவில் தீவிர சுகாதார பணி அமைச்சர் நேரு உத்தரவு
திருச்சி, ஜூன் 9: குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.
கோ.அபிஷேகபுரம் கோட்டம் 50 மற்றும் 60 வது வார்டு மக்களிடம் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு குறை கேட்டார். 50வது வார்டு அரவானூரில் திராவிட நகர் பகுதியில் சாலைகள் சீரமைப்பு, வாய்க்காலை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைத்தல், தெருக்களில் வடிகால்களை உயர்த்தி அமைத்தல் ஆகிய பணிகளை 15 நாளில் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
லிங்கம் நகரில் ரூ. 55 லட்சம் செலவில் 360 மீட்டர் சாலையை உயர்த்தி, சாலையின் இரு புறமும் மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் தனித்தனியாக செல்ல ஏதுவாக தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குழுமணி சாலையில் குறுகலான பழைய காசிவிளங்கி பாலத்தினை ரூ. 75 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்த வருகிறது. இவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்நாயக்கன் தெரு எழில்நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால்களை உயர் த்தி இதன் மூலம் ராமலிங்க நகர் மற்றும் கீழகல்நாயக்கன் தெருவில் மழைநீர் எளிதாக வடியுமாறு வடிகால்களை அமைக்குமாறு பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கீழ கல்நாயக்கன் தெருவில் ஒரு லட்சம் செலவில் உடற்பயிற்சி மையம் அமைக்கவும் அமை ச்சர் உத்தரவிட்டார்.
50வது வார்டு கொரடாதோப்பு பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் எளிதாக வடிய ஏதுவாக சாலைகள், வடிகால்களை உயர்த்தும் பணியை உடனடியாக துவங்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி பகுதியில் குறுகலான தெருக்கள் மற்றும் சந்துப்பகுதியில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று நகர்நல அலுவலருக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கலெக்டர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, துணைமேயர் அன்பழகன், நகரப் பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், கோட்டத் தலைவர் அறிவுடைநம்பி, கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், உதவி செயற்பொறியாளர் நாகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.