தினகரன் 11.06.2010
தண்ணீர் கலப்படம் செய்த 120 லிட்டர் பால் பறிமுதல்
ராசிபுரம், ஜூன் 11: ராசிபுரம் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட 120 லிட்டர் பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.
ராசிபுரம் நகராட்சி பகுதியில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட பால் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி துப்புரவு அலுவலர் ராம்குமார் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரகாஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இவர்கள், நகராட்சி பகுதி யில் பால் வியாபாரத்தில் ஈடுபட்ட 9 வியாபாரிகளிடம் இருந்த பாலை சோதனையிட்டனர். பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என ‘லேக்டோ மீட்டர்’ என்ற கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 120 லிட்டர் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவை கீழே கொட்டி அழிக்கப்பட்டது. நகராட்சி பகுதியில் பால் வியாபாரத் தில் ஈடுபடுபவர்கள் உரிய உரிமம் பெற்று தரமான பாலை விற்பனை செய்ய வேண்டும் என ஆணை யாளர் தனலட் சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.