Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 11.06.2010

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 11: காமன்வெல்த் போட்டியை நடத்த டெல்லி தயாராகி வரும் நிலையில், கொசு மற்றும் தண்ணீரால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

டெல்லியில் வரும் அக்டோபர் மாதம் 3 முதல் 14ம் தேதி வரையில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. நகரில் மழைக்காலத்தின்போது கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த ஆண்டில் சரியாக மழைக்காலத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன.இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீரால் பரவும் நோய்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் இப்போதே தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

புதுடெல்லி நகராட்சி கவுன்சில் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் இருந்த 300 இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளன.

அதில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் சில அரசு கட்டிடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி கவுன்சிலின் சுகாதார மருத்துவ அதிகாரி பி.கே.சர்மா கூறியதாவது:

எங்கள் பகுதியில் கொசு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டுபிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கும், குடியிருப்பு சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

மழைக் காலத்துக்கு முன்னதாக கொசு ஒழிப்பு மருந்தை எங்கள் பகுதி முழுவதும் தெளிக்க உள்ளோம். கொசுக்களால் ஏற்படும் நோயை தடுக்க தேவையான அளவு மருந்தை இருப்பு வைத்துள்ளோம். இதேபோல் கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை அடிக்கும் இயந்திரங்களையும் தயாராக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கொசு ஒழிப்பில் மாநகராட்சியும் மும்முரமாக இறங்கி உள்ளது. காமன்வெல்த் போட்டியின்போது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க திட்டம் தயாரித்துள்ளது. மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் சிறப்பு குழுவினர் நோய் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக சென்று அதை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆண்டு கொசு மற்றும் தண்ணீரால் பரவும் நோய்களை தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட உள்ளது.

காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக இந்த நடவடிக்கை தொடங்கும். இதற்காக 14 புகையடிக்கும் இயந்திரங்கள், 247 கை தெளிப்பான்கள் ஆகியவற்றை மாநகராட்சி வாங்கியுள்ளது.