Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம் சுத்தம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி

Print PDF

தினமலர் 17.06.2010

துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம் சுத்தம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி

சேலம்: சேலம் மாநகராட்சியின் பல இடங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, எருமாப்பாளையம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. இரண்டு மாதமாக கோடைகாலம் நிலவியதால் குடிநீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்ய முடியாத சூழல் நிலவியது. மாநகரின் பல இடங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது மேட்டூர் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இரண்டு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் எஞ்சியிருந்த குடிநீரை அகற்றிவிட்டு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்களின் மேற்பார்வையில், கிருமி நாசினிகள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. தவிர, சேலம் சாரதா கல்லூரி அருகே இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைப்பும் நேற்று சீரமைக்கப்பட்டது.