தினகரன் 17.06.2010
கோவில்பட்டி மார்க்கெட்டில் மாம்பழக்கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை
கோவில்பட்டி, ஜூன்.17: கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள மாம்பழ கடைகளில் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா அல்லது இயற்கையான முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தலைமையில் சுகாதார அலுவலர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிராஜ், சீனிவாசன், வெங்கடேசன், முத்துகுமார், ஸ்டான்லிகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாம்பழ கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாம்பழக்கடைக்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களுக்குள் கார்பைட் கல் வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.
இருப்பினும் எந்த கடையிலும் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்தார்.