தினகரன் 30.06.2010
சீசன் முடியும் போது ரெய்டு வேலூரில் 310 கிலோ மாம்பழம் பறிமுதல்
வேலூர், ஜூன் 30: இயற்கையாக பழுக்க வேண்டிய மாம்பழங்களை வியாபாரிகள் சிலர் கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கவைக்கப்படுகிறது. இதை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிறு எரிச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயுக் கோளாறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே கார்பைட் கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
வேலூரில் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மாம்பழ சீசன் முடியும் நிலையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் கவுரி சுந்தர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் நேற்று நேதாஜி மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கடையில் மாம்பழங்களுக்கு இடையில் பொட்டலங்களாக இருந்த கார்பைட் பொடியை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டில் ஈடுபட்டனர். முடிவில் 310 கிலோ மாம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.