தினமணி 31.07.2009
பாதாள சாக்கடைத் திட்டம்: கழிவு நீர் கால்வாய்க்கு 5-வது முறையாக டெண்டர்
சேலம், ஜூலை 30: சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.71.17 கோடியில் கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கு ஏற்கெனவே 4 முறை டெண்டர் விடப்பட்டது. இருப்பினும் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் அவற்றை நிராகரித்துவிட்டது.
இதையடுத்து 5-வது முறையாக டெண்டர் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி பேசியது:
சேலம் மாநகராட்சியில் ரூ.149.39 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக கழிவு நீர் கொண்டுச் செல்லும் குழாய்கள் ரூ.71.17 கோடியில் அமைக்கும் பணி 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பெறப்பட்டு திறக்கப்பட உள்ளன. இந்த டெண்டரில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு தொழில்நுட்பத் தகுதிகள், ஒப்பந்தப்புள்ளி நமூனா விவரங்கள் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்களுக்கு கண்காணிப்புப் பொறியாளர் ஞானமணி, உலக வங்கியின் தமிழ்நாடு துணைத் தலைவர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இதில் சுமார் 10 ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.