தினமலர் 20.07.2010
சுத்தமாகிறது தத்தனேரி
மதுரை: மதுரை தத்தனேரி மயானத்தை நவீனமாக்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.தத்தேனரி மயானத்தை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது. இம்மயானத்தில் ஏற்கனவே எரிவாயு தகன மேடை ஒன்று இருக்கிறது. அருகில் பழைய முறையில் தகனம் செய்யும் ஷெட்டுகள் இருக்கின்றன. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக் கிடந்தன.இம்மயானத்திற்கு ஒரு வழியாக விமோச்சனம் ஏற்பட்டுள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், மயானத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்படும். உள்ளே புல்வெளி, பூங்கா அமைக்கப்படும். முடி இறக்கி, சடங்குகள் செய்யும் இடம், குளியலறை, கழிப்பறைகள் கட்டப்படும். இன்னொரு எரிவாயு தகன மேடையும் கட்டப்படுகிறது. 65 லட்சம் ரூபாய் செலவில் எரிவாயு தகன மேடையில் மராமத்து பணிகள் செய்யப்படுகின்றன. உள்ளே கான்கிரீட் பாதைகள் அமைக்கப்படுகின்றன. நான்கு மாதங்களில் இப்பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.