தினமணி 23.07.2010
நாகர்கோவிலில் தெப்பக்குளத்தில் குப்பை: ஆட்சியர் நடவடிக்கைக்கு உத்தரவு
மதுரை, ஜூலை 22: நாகர்கோவில் பெருமாள் தெப்பக்குளத்தில் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டத் தடை கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக, மனித உரிமை மீறலுக்கான இலவச சட்ட உதவி மையச் செயலர் கிரினிவாச பிரசாத் தாக்கல் செய்த மனு:
நாகர்கோவில் பெருமாள் குளத்தில் தண்ணீர் 13 ஏக்கர் பரப்பளவில் தேங்கியிருந்ததால், அப்பகுதியின் நிலத்தடி நீர்வளம் சிறப்பாக இருந்தது. ஆனால், நகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை குளத்தில் கொட்டத் தொடங்கியதால், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, குளத்தில் குப்பைகளைக் கொட்டத் தடை விதித்து, நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், எம். துரைச்சாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மனுதாரர் அளித்துள்ள மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.