தினகரன் 28.07.2010
சித்தூர் நகராட்சி நீரூற்று பூங்கா சீரமைப்பு
சித்தூர், ஜூலை 28: தினகரன் செய்தி எதிரொலியால் சித்தூர் நகராட்சி நீரூற்று பூங்கா சீரமைக்கும் பணி தொடங்கியது.
சித்தூரில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சித்தூரில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் சுமார் ரூ.4லட்சம் செலவில் அப்போதைய நகராட்சியினர் நீரூற்று பூங்கா அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்தப்பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்த நீரூற்று பூங்காவில் ஆள் உயரத்துக்கு புதர் போன்று முள்செடிகள் வளர்ந்தது. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் கடந்த சில மாதங்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சித்தூர் நகராட்சியினர் முள்புதர்களை வெட்டியும், இரும்பு கம்பி வேலி அமைத்தும் இந்த நீரூற்று பூங்காவை தூய்மை படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் இந்த நீரூற்று பூங்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க உள்ளது. நடவடிக்கை எடுத்த நகராட்சியினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.