தினமணி 29.07.2010
சென்னையில் கொசு ஒழிப்புப் பணியில் 1050 தொழிலாளர்கள்
சென்னை, ஜூலை 28: சென்னையில் கொசு ஒழிப்புப் பணியில் 1,050 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகரில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 110 கிலோ மீட்டர் நீளம் உள்ள நீர்வழிப் பாதைகளில் 9 கட்டுமரங்கள், 6 பைபர் படகுகள் மூலம் கொசுப் புழுக்கொல்லி மருந்து நாள்தோறும் தெளிக்கப்பட்டு, கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு வருகிறது.
800 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் மூடிகளை திறந்து, கொசுப் புழுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள கொசுக்களை அழிக்க சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடுகள் தோறும் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சென்று மேல்நிலைத்தொட்டி, கீழ்நிலைத்தொட்டி, கிணறு ஆகியவற்றில் கொசுப் புழுக்கொல்லி மருந்து போடப்படுகிறது. மேலும் கொசு உற்பத்தியைத் தடுக்க மழைநீர் தேங்கியுள்ள உபயோகமற்ற பொருள்களான பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன.
கொசுக்களை ஒழிக்க மாலை நேரங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்ட 20 பெரிய புகை பரப்பும் இயந்திரங்களும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட 10 புகை பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிக்கும் பணியில் 1,050 மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொசுப்புழு மற்றும் கொசு தடுக்கும் பணிகளுக்காக 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகை பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு நாள்தோறும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.