தினகரன் 02.08.2010
காலாவதி உணவுப்பொருள் விற்பனையா? கடைகள், ஓட்டல்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு சிவகாசியில் அதிரடி
சிவகாசி ஆக 2: சிவகாசி நகரில் கடைகள், ஓட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகாசி நகரில் காலாவதி, கலப்பட உணவு பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் சுகாதாரத்துறையினர் சேர்மன் சண்முகம் ரோடு, பிஎஸ்ஆர் ரோடு, புதுரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு உட்பட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்களில் நடத்தி ஆய்வில், சந்தேகத்திற்கிடமான பிஸ்கட்டுகள், டீத்தூள், உப்புபாக்கெட், கோதுமை மாவு, எண்ணெய் பாக்கெட்டுகள் முதலியவற்றின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலப்பட பொருள்கள் என தெரிய வந்தால் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்த னர்.
இரு மாதங்களுக்கு முன்பு, சிவகாசி வடக்குரத வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கோதுமை மாவு பாக்கெட் மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், கலப்படமானது என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கோதுமை மாவு தயாரித்தவர், விற்பனை செய்த ஏஜென்ட், விற்பனையாளர் ஆகியோர் மீது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், பரிந்துரையின் பேரில் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நகராட்சி உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.