தினகரன் 05.08.2010
காரையாரில் ஆற்றுநீரை குடிக்க வேண்டாம் செயல் அலுவலர் வேண்டுகோள்
வி.கே.புரம், ஆக. 5: காரையாருக்கு ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் ஆற்று நீரை குடிக்கவேண்டாம் என வி.கே.புரம் செயல் அலுவலர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
பிரசித்தி பெற்ற பாபநாசம் காரையார் சொரிமுத்துஅய்யனார் கோயிலில் வருகிற 9ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக வி.கே.புரம் நகராட்சி சார்பில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்கப்படும். மேலும் 2 லாரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பக்தர்கள் யாரும் ஆற்றுநீரை பருக வேண்டாம் என வி.கே.புரம் நகராட்சி செயல் அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று கூறினார்.