தினமலர் 10.08.2010
நவீன ஆட்டிறைச்சி மையம் துவக்கம்
மதுரை: மதுரை மாநகராட்சியின் சார்பில் அனுப்பானடி பகுதியில் 3.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நவீன ஆட்டிறைச்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நெல்பேட்டை, செல்லூர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகள் அறுக்கப்படுகின்றன. கழிவுகளை அப்படியே விடுவதாலும், வாய்க்காலில் கொட்டுவதாலும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, அனுப்பானடி மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ஆடுகள் அறுக்கும் வகையில், நவீன ஆட்டிறைச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில் மருத்துவப் பரிசோதனை, வலியில்லாமல் அறுத்தல், சாப்பிட தகுதியில்லாத இறைச்சி பிரிக்கப்படும் பகுதிகள் தனித்தனியாக உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின் கீழ், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இறைச்சி வெட்டப் பயன்படும் கத்தி, அரிவாள்கள் நீராவி மூலம் உடனுக்குடன் சுத்தப்படுத்தப்படுகிறது. தரமான இறைச்சி என்பதற் கான மருத்துவச் சான்றுக்கு பின் வினியோகிக்கப்படுகிறது. இத்தனை வசதிகளை உள்ளடக்கிய இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள மையத்துக்கு, மாநகராட்சி சார்பில் 3.74 கோடியும், மாநில அரசின் இரண்டாம் திட்டத்தின் கீழ் பத்து லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. இம்மையத்தை மேயர் தேன்மொழி நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றனர்.