தினமணி 13.08.2010
நகரை பளிச்சென வைக்க உத்தரவு
சேலம், ஆக. 12: முதல்வர் கருணாநிதி வருவதால் சேலம் மாநகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி சேலம் வருகிறார். இதையொட்டி மாநகராட்சி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது, முதல்வர் சேலம் வருவதால் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். தெரு விளக்குகள் சரியாக எரிகின்றனவா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
குடிநீர் இணைப்புகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா எனவும் கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.
மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்கொடி, செயற்பொறியாளர்கள் ரவி, வெங்கடேஷ், அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் ரணதேவ், சீனிவாசன், ரவி, சுரேஷ், சுப்பிரமணியம், உதவி ஆணையர்கள் நெப்போலியன், ஜெகந்நாதன் (பொறுப்பு), கணேசன் (பொறுப்பு), கண்காணிப்பாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.