Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கும் கழிவுநீர்: 20 ஆண்டுகளாக மேம்பாலம் கோரும் ஆம்பூர் மக்கள்!

Print PDF

தினமணி 18.08.2010

ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கும் கழிவுநீர்: 20 ஆண்டுகளாக மேம்பாலம் கோரும் ஆம்பூர் மக்கள்!

ஆம்பூர்,​​ ஆக.​ 17:​ ஆம்பூர் நகராட்சி-பெத்லகேம் இடையே இருப்புப் பாதையைக் கடக்க மேம்பாலம் இல்லை.​ இதனால்,​​ ஆம்பூர் நகர மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

​ 20 ஆண்டுகால கோரிக்கை எப்போதும் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.​ ​

​ ஆம்பூர் நகரையும்,​​ பெத்லகேம் பகுதியையும் இரண்டாகப் பிரிக்கிறது அங்கு செல்லும் இருப்புப் பாதை.​ ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட 28 முதல் 31 வரை உள்ள 4 வார்டுகள்,​​ பெத்லகேம் பகுதியில் அமைந்திருக்கின்றன.​ இங்கு மட்டுமே சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.​ மேலும்,​​ பெத்லகேமுக்கு அப்பால் நாயக்கனேரி,​​ பனங்காட்டேரி ஆகிய மலை கிராமங்களும் உள்ளன.

​ பெத்லகேம் பகுதியில் மின்வாரிய அலுவலகம்,​​ துணை மின் நிலையம்,​​ தனியார் கல்லூரி,​​ 2 ஆங்கிலப் பள்ளிகள்,​​ நகராட்சி தொடக்கப்பள்ளி,​​ நிதியுதவி தொடக்கப்பள்ளி,​​ காவலர் குடியிருப்பு,​​ பெதஸ்தா மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.​ இதுதவிர,​​ ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் அங்கு உள்ளன.

​ ​ இப்பகுதிக்குச் செல்வோர் ஆம்பூர் பஸ் நிலையத்துக்கு எதிரே இருக்கும் குறுகலான குகைவழிப் பாதையையே பயன்படுத்துகின்றனர்.​ இதில் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

​ இதேபோல,​​ நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டுமெனில்,​​ ஆம்பூர் புறவழிச்சாலை அருகே இருப்புப் பாதைக்குக்கீழ் உள்ள மற்றொரு குகை வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

​ இரு குகைவழிப் பாதைகளும் தரை மட்டத்திலிருந்து தாழ்வாகவே அமைந்திருப்பதால்,​​ மழை நீர் மட்டுமல்லாது சாக்கடைக் கழிவு நீரும் இங்கு வந்து தேங்கி நிற்கிறது.

​ இதனால்,​​ நடந்து செல்லும் பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்தாமல்,​​ நேரடியாக இருப்புப் பாதையைக் கடந்து செல்கின்றனர்.​ சிலர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு ரயிலின் அடியில் புகுந்து பாதையைக் கடக்கின்றனர்.​ இதனால் சிலர் விபத்துகளில் சிக்கி இறப்பதும் தொடர்கிறது.

​ பலத்த மழை பெய்யும் நேரங்களில் ஆம்பூரிலிருந்து பெத்லகேம் பகுதி முழுவதும் ​ துண்டிக்கப்பட்டுவிடும்.​

அதுபோன்ற சமயங்களில் மின்சாரத்துக்காக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.​ ​

​ ​ இரு குகைவழிப் பாதைகளிலும் மின்விளக்குகள் கிடையாது.​ இதனால் இப்பாதை எப்போதும் இருள்சூழ்ந்து காணப்படும்.​ இரவு நேரத்தில்,​​ இப்பாதையைக் கடப்பது மிகவும் ஆபத்தான செயல் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.

​ 20 ஆண்டு கோரிக்கை:​​ பெத்லகேம் பகுதிக்கு மேம்பாலம் அமைத்துத்தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.​ இது தொடர்பாக பொதுமக்களோடு,​​ மக்கள் பிரதிநிதிகளும் மத்திய,​​ மாநில அரசுகளுக்குப் பல முறை மனுக்கள் அனுப்பியுள்ளனர்.​

ஆனால்,​​ ரயில்வே துறையினர் இடத்தை ஆய்வு செய்ததோடு சரி;​ மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை..​ ​

​ ​ எனவே,​​ இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.​ நடவடிக்கை எடுக்குமா மத்திய,​​ மாநில அரசுகள்?