தினகரன் 19.08.2010
கோவில்பட்டி கடைகளில் தரமற்ற 20 கிலோ ஸ்வீட் பறிமுதல் சுகாதார அதிகாரிகள் அதிரடி
கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதி ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளில் தரமற்ற இனிப்பு வகைகள் விற்பதாக நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், தர்மராஜ், வெங்கடேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கோவில்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் மெயின்ரோடு பகுதியில் ஸ்வீட்ஸ் ஸ்டால் மற்றும் பேக்கரி கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.
சோதனையின்போது, கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகப்படியான கலர் பொடிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தனர்.
மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்பு, கார வகைகளின் தரம் குறித்து சோதனை நடத்தினர். இதில் தரமற்ற இனிப்பு வகைகள் என மொத்தம் 20 கிலோ இனிப்பு வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர். கடைகளில் காலாவதியான இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றதுடன், தரமான உணவு பொருட்களை விற்குமாறும், இனிப்பு வகைகளில் அதிகப்படியான வண்ண பொடிகளை சேர்க்க கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.