Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை லாரி சிறைபிடிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை லாரி சிறைபிடிப்பு

நெல்லை, ஆக.25: ராமையன்பட்டிக்கு நேற்று குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி குப்பை லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.

நெல்லை மாநகராட்சி குப்பைகள், பாதாள சாக்கடை கழிவுகள் ராமையன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் கடந்த 10 ஆண்டு காலமாக கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின. அதில் எழுந்த புகையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாதம் ஒன்று கடந்தும் குப்பைகளில் புகை இன்னமும் அணைவதாக இல்லை.

இந்நிலையில் மாநகராட்சி கடந்த ஒரு மாத காலமாக குப்பைகளை பாளை சீவலப்பேரி சாலையில் உள்ள பழைய இடத்தில் கொட்டி வந்தது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், நேற்று ஒரு லாரி குப்பைகள் மீண்டும் ராமையன்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராமையன்பட்டி ஊர் மக்கள் இதை அறிந்து, பஞ்சாயத்து அருகே லாரியை சிறை பிடித்தனர்.

களஞ்சியம் காட்டுராஜா, மஸ்தான் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லாரி டிரைவர் வேறு வழியின்றி அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு, மீண்டும் சீவலப்பேரி சாலைக்கு கொண்டு சென்றார்.