தினகரன் 25.08.2010
இனாம் கரூர் 4 வார்டுகளில் தனியாரிடம் துப்புரவு பணி
கரூர், ஆக. 25: இனாம் கரூர் நகராட்சியில் நான்கு வார்டுகளில் தனியாரிடம் துப்புரவுப் பணிகள் ஒப்படைக்கப்பட இருக்கிறது. கரூர் அருகே உள்ள தாந்தோணி நகராட்சியில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து தனியாரிடம் துப்புரவு பணிகளை விடுவதற்கு கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி நிர்வாகங்கள் முயற்சி மேற்கொண்டன. இனம் கரூர் நகராட்சியில் வார்டு 6, 7, 8, மற்றும் 9 ஆகிய நான்கு வார்டுகளில் தனியாரிடம் துப்புரவு பணி மேற்கொள்ள வருடாந்திர ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் குறைந்த ஒப்பந்த புள்ளி கொடுத்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஒப்பந்த தொகையை நகராட்சி நிர்வாகம் வழங்கும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவி கவிதா கணேசன் தெரிவித்தார்.
இனாம் கரூர் நகராட்சி வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் செட் பழுதடைந்துள்ளது. இந்த மோட்டாரை பழுதுபார்க்க ரூ.ஒரு லட்சத்து 65ஆயிரம் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இனாம் கரூர் நகராட்சியில் ஆழ்துளை கிணறு கைப்பம்புகளை பழுது பார்க்கும் மாதிரி உதிரி பாகங்கள் ரூ.90ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் நகர்மன்ற தலைவி கூறினார்.