தினமணி 14.08.2009
மதுரை மாநகராட்சியில் பன்றிக் காய்ச்சல் குறித்து ஆலோசனை
மதுரை, ஆக.13: பன்றிக் காய்ச்சல் குறித்து மாநகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எஸ். செபாஸ்டின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், வறட்டு இருமல், கை, கால் அசதி, மூக்கில் நீர் வழிதல், அதிகமான வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
ஒரு மாணவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தால் மற்ற மாணவ, மாணவியருக்கு பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் யசோதாமணி, மாநகராட்சி டாக்டர்கள், செவிலியர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.