தினமணி 26.08.2010
துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார சீர்கேடு
ஒசூர், ஆக. 24: ஒசூர் நகராட்சியில் உள்ள 10 வார்டுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது முதல் நகராட்சிக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதுடன், துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
÷1994-ல் ஒசூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது 47 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001-ல் நகராட்சி ஆணையராக இருந்த சந்தானம், 117 பேரை துப்புரவுப் பணிக்கு நியமித்தார். ÷கடந்த சில ஆண்டுகளாக ஒசூர் நகராட்சியில் 199 துப்புரவுப் பணியாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களை கண்காணிக்க 10 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு நகரில் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 2008-ல் ஒசூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 10 வார்டுகளை தனியார் வசம் ஒப்படைப்பது எனவும், 3 மாதம் இந்த 10 வார்டுகளில் தனியார் துறையினர் சுகாதாரப் பணிகளை முழுமையாக செய்தால், மீண்டும் பணியை கால நீட்டிப்பு செய்வது எனவும் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ÷தனியார் துறையினர் மேற்கொண்ட துப்புரவுப் பணிக்காக மாதம்தோறும் ரூ..7 லட்சம் நிதி வழங்கப்பட்டு வந்தது. 2009 நவம்பர் முதல் தனியாருக்கு நிதி வழங்குவதை நகராட்சி நிறுத்தியது.
÷இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 10 வார்டுகளிலும் துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. குறிப்பாக இந்திரா நகர், வெங்கடேஷ் நகர், தாயப்பா தோட்டம், முத்தூராயன் ஜுபீ, ராஜகணபதி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் குப்பைகள் சரிவர எடுக்கப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.