தினமணி 26.08.2010
குடிநீர், காலாவதி உணவு பொருள்கள் குறித்த ஆய்வு
திருப்பத்தூர், ஆக. 25: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், கல்லல், காரைக்குடி ஆகிய ஊர்களில் குடிநீர் மற்றும் காலாவதி உணவுப் பொருள் குறித்து சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதன்கிழமை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ரகுபதி தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலை 10 மணியளவில் கல்லலில் கலப்படப் பொருள் ஆய்வைத் தொடங்கினர். கல்லல் மற்றும் காரைக்குடிப் பகுதிகளில் இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சிறு தவறுகளைத் திருத்திக் கொள்ள எச்சரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம், மதுரை ரோடு, உள்ளிட்ட கடைகளில் இருந்த தேதியில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள், பாதாம் பால் பாட்டில்கள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில சுகாதாரத் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் ரகுபதி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், சுகாதாரப் பணிகளின் நேர்முக உதவியாளர் ராஜா, மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், ராஜ்குமார் திருப்பத்தூர் உணவு ஆய்வாளர் சுரேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு, திருப்பத்தூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் ஆகியோர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். ஆய்வில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர்ப் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, பேரூராட்சி அலுவலகம் முன் அழிக்கப்பட்டது.