தினமலர் 26.08.2010
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: 11 ஏக்கரில் புதிய இடம் தேர்வு
திண்டுக்கல்:பொன்மான்துறை புதுப்பட்டியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வத்தலக்குண்டு ரோட்டில் புதிய குப்பை கிடங்கு உருவாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் என நாள் ஒன்றுக்கு 10 டன் குப்பை சேர்கிறது.இந்த குப்பைகள் திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மான்துறைபுதுப்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பகுதியில் கொட்டப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கிடங்கை பூட்டினர்.தங்கள் கிராமத்தில் ஏற்கனவே விடப்படும் கழிவு நீரால் விளை நிலமும்,மக்கள் நலனும் பாதிக்கப் பட்டுள்ளது என்றும், மேலும் ஓட் டல் கழிவுகள், அழுகிய காய்கறிகளை இங்கு கொட்டுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குப்பை கொட்டுவதன் நோக்கமே குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதே என்று நகராட்சி நிர்வாகம் கூறி பொதுமக்கள் கருத்தை ஏற்க மறுத்தனர். தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் குடிநீரை பம்பிங் செய்யும் வத்தலக்குண்டு ரோட்டில் 11 ஏக்கரில் குப்பை கிடங்கு ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.