தினகரன் 27.08.2010
கொசு ஒழிப்பு பணி தீவிரம் கூவம் ஆற்றில் ஆகாய தாமரை அகற்ற மூங்கில் தடுப்பு வேலி
சென்னை, ஆக.27: அண்ணாநகர் பகுதி கூவம் ஆற்றில் மூங்கில் தடுப்பு வேலி அமைத்து ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தி, கொசுப் புழுக்களை அழிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் உருவாகும் ஆகாயத் தாமரையால் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.
மாநகராட்சி சுகாதாரப்பிரிவு மற்றும் மலேரியா பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் சென்று ஆகாயத் தாமரைகளை அகற்றியும், மருந்து தெளித்தும் கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வழித் தடங்களில் உருவாகும் ஆகாயத் தாமரைகள், நீரில் அடித்து வரப்படுவதால் பல இடங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டு கொசுப் புழுக்கள் உருவாகிறது.
இதை தடுப்பதற்காக புறநகர்ப்பகுதியான அரும்பாக்கம் நியூ காலனி, அண்ணாநகரில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் நடுவங்கரை பகுதியிலுள்ள கூவம் ஆற்றின் குறுக்கே மூங்கில் தடுப்பு வேலிகளை அமைத்து ஆகாயத் தாமரைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். கொசுப் புழுக்களை அழிக்க மருந்தும் தெளித்தனர்.
இந்த பணியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், உதவி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரபாவதி மேற்பார்வையிட்டனர்.அண்ணாநகர் பகுதி கூவம் ஆற்றில் மூங்கில் தடுப்பு வேலி அமைத்து ஆகாய தாமரை அகற்றப்படுகிறது.