மாலை மலர் 27.08.2010
ரூ.1 1/2 கோடி செலவில் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் எந்திரங்கள்; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, ஆக. 27- மேயர் மா.சுப்பிரமணியன் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் மணல் ஜலிக்கும் எந்திரம், சாலை உருளைகள், சிறிய வகை லோடர்கள் ஆகியவற்றை இன்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் முன்பு சிறிய சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடுகளை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. 2006ம் ஆண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்காக சிறிய வகை லோடர்கள் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரை முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படியும், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படியும் ரூ.26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
14 அமர்வு மேடைகள், 80 இடங்களில் புல்வெளி தரைகள், மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதைகள், பறவைகள் பறப்பது போன்ற அழகிய மின்விளக்குகள் போன்ற பல்வேறு அழகிய பணிகள் மூலம் மெரினா கடற்கரை பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தும் மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி மூலம் தடை விதிக்கப்பட்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
எனவே, அனைவரும் ஒத்துழைத்து இயற்கை தந்த அழகிய மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கவும், சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கவும் ஒத்துழைக்க வேண்டும்.
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்ப தற்காக மணல் ஜலித்து சுத்தம் செய்யும் இயந்திரம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரம் செலவில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இயந்திரம் சிறப்பாக செயல்படுவதால் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்ய பெல்ஜியம் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு, எஸ் கார்ட்ஸ் ட்ராக்டரில் பொருத்தப்பட்ட மணல் ஜலிக்கும் இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டு, இன்று முதல் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மணல் ஜலிக்கும் இயந்திரத்தின் விலை ரூ. 21 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். மொத்தம் இன்று 15 வாகனங்கள் ரூபாய் ஒரு கோடியே 59 இலட்சத்து 48 ஆயிரம் செலவில் வழங்கப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர்(சுகாதாரம்) ஜோதி நிர்மலா, துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக் குழுத்தலைவர்கள் சுரேஷ்குமார், ஜானகி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.