தினகரன் 30.08.2010
பொன்னேரி ஓட்டல், டீக்கடைகளில் போலி டீத்தூள் பறிமுதல்
பொன்னேரி, ஆக.30: பொன்னேரி பகுதியில் டீக் கடை மற்றும் ஓட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளிலிருந்து போலி டீத்தூள், காலாவதி தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இல்லை என திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணி இயக்குனர் சம்பத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, உணவு கடத்தல் பிரிவு ஆய்வாளர்கள் சிவகுமார், முருகன் தலைமையில் அலுவலர்கள் காசிநாதன், நீதிவாசன் ஆகியோர் நேற்று முன்தினம் பொன்னேரியில் உள்ள ஓட்டல், டீக்கடை, குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, போலியாக தயாரித்த 15 கிலோ டீத்தூள், காலாவதியான 1,200 லிட்டர் தண்ணீர் பாக்கெட் மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவை மைதானத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.
‘சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்வது தொடரும். பிஎப்ஏ சான்றிதழ் இல்லாத ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு செய்யும் டீக்கடை, ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.