தினகரன் 31.08.2010
வியாசர்பாடி பகுதியில் வயிற்றுப்போக்கு குளோரின் மாத்திரைகள் வீடு வீடாக வினியோகம் மாநகராட்சி தீவிர நடவடிக்கை
தண்டையார்பேட்டை, ஆக. 31: வியாசர்பாடி பகுதியில் குடிநீரில் மாசு கலந்ததால் வயிற்று போக்கு ஏற்பட்டு 75 பேர், தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வீடுவீடாக குளோரின் மாத்திரை வினியோகிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால், சாலையோரங்களிலும் பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியானது. இந்நிலையில், வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 40 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த மேலும் 35 பேர் வயிற்று போக்கு நோயால் பாதிக்கப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் சேர்க்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து 75 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கு காலரா தாக்கியுள்ளதா? என்பதை அறிய, ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் குடிநீரில் ஏற்பட்ட மாசு காரணமாகவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வாரியமும், மாநகராட்சி சுகாதாரத்துறையும் இணைந்து வீடுவீடாக குளோரின் மாத்திரை வழங்குகின்றனர். மேலும் கன்னிகாபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்தும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.