தினகரன் 31.08.2010
தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் பஸ் நிலையத்தில் பாக்கெட் குடிநீர் பறிமுதல்
தாம்பரம், ஆக. 31: தாம்பரம் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பீர்க்கன்காரணை, பல்லாவரம் பஸ் நிலையம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பதித்த பாலிதீன் பாக்கெட்டுகளில் கிணற்று நீரை அடைத்து விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
தாம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் ஊழியர்கள், தாம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை, ஓட்டல், குளிர்பான கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலி குடிநீர் பாக்கெட், தயாரிப்பு தேதி குறிப்பிடாத குளிர்பானம், பாதா மில்க் ஆகியவை 60 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
தொடர்ந்து காலாவதியான குடிநீர் பாக்கெட், குளிர்பானம் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.