தினகரன் 31.08.2010
குடிநீர் வால்வு பகுதியில் கழிவுநீர் அதிரடியாக அகற்றம்
ஊத்துக்கோட்டை, ஆக.31: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை உட்பட சுற்றுப்புற பகுதி வீடு, கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
நீர்த் தேக்க தொட்டியின் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையின் செப்டிக் டேங்க்கில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தொட்டிக்கு கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது.
இதனால், அங்குள்ள குடிநீர் தொட்டி கேட் வால்வு பொருத்தப்பட்ட பகுதியில் கழிவு நீர் கலந்து புழுக்கள் உற்பத்தி துர்நாற்றம் வீசியது. தண்ணீர் திறந்து விடும்போது குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, செப்டிக் டேங்க் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுபற்றி, கடந்த 22ம் தேதி ‘தினகரன்‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே உள்ள கேட் வால்வு தொட்டியில் தேங்கிய கழிவுநீரை நேற்று பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அகற்றினர். பேருந்து நிலைய கழிவறையை மூடினர். அங்கு, புதிதாக கட்டப்பட்ட நவீன கட்டண கழிவறையும் திறக்கப்பட்டது.