தினமணி 03.09.2010
கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
நாகர்கோவில், செப்.2: நாகர்கோவிலில் பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவற்றின் பயன்பாடு மாவட்டத்தில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி நாகர்கோவிலில் பல்வேறு கடைகளிலும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் நாகராஜன், நாகர்கோவில் நகர்நல அலுவலர் போஸ்கோராஜன், மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேலு, வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், உணவு ஆய்வாளர் குமாரபாண்டியன், சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பரராமலிங்கம், பொன்வேல், இளங்கோ உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது 70 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை பயன்படுத்திய இரு கடைகளுக்கும் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், செட்டிக்குளத்திலுள்ள கடையொன்றில் உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத தண்ணீர் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.