தினகரன் 06.09.2010
கைலாஷ் காலனியில் ரூ1.5 கோடி செலவில் நவீன பொதுக்கழிப்பிடம் மேயர் சகானி திறந்தார்
புதுடெல்லி, செப். 6: தெற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி மார்க்கெட்டில் நவீன கழிப்பிடத்தைக் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி மற்றும் கைலாஷ் காலனி மார்க்கெட் சங்கம் ஆகியவை சார்பில் ரூ1.5 கோடி செலவில் நவீன கழிப்பிட வளாகத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டு, தனியார் நிறுவனம் வசம் பணி ஒப்படைக்கப்பட்டது
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுக் கழிப்பிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. மேயர் சகானி கலந்துகொண்டு கழிப்பிடத்தை திறந்து வைத்தார்.விழாவில், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கழிப்பிட வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில் சூரிய ஒளி மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பார்வையற்றவர்களுக்கென தனியாக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டி, செயல்படுத்தி, ஒப்படைக்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த கழிப்பிட வளாகத்தை தனியார் நிறுவனம் கட்டியுள்ளது. கழிப்பிட வளாகத்தில் விளம்பரங்களை வெளியிட்டு அந்நிறுவனம் வருமானத்தை ஈட்டும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.