தினமணி 08.09.2010
சுகாதாரக்கேட்டில் சிக்கிய ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி
திருவாடானை, செப். 7: திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் மழை நீர் செல்லும் கால்வாய், கழிவுநீர்க் கால்வாய்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சி நிர்வாகத்தால் கடந்த வாரம் தெருக்கள், சாலைகள், கடைத் தெருவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடைகள் ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், மழை நீர் செல்லும் கால்வாய்கள் சேதம் அடைந்து, தற்போது அவற்றை சரிவர சுத்தம் செய்யாமலும் அப்படியே விட்டு சென்று விட்டனர. இதன் காரணமாக சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியும், கழிவுநீர் வெளியே செல்ல முடியாமலும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம், கொசுக்கள் தொல்லையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சி செயல் அலுவலர் இளவரசி கூறியது:
தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்து கழிவுநீர் ஓடுவதற்கு வழிவகை செய்யபடும் என்று தெரிவித்தார்.