தினமலர் 24.09.2010
தண்ணீரை காய்ச்சி குடியுங்கள் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்குமாறு பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் வரை இரு பக்கத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பள்ளம் வழியாக பவானி ஆற்றில் வந்து கலக்குகிறது. பவானி ஆற்றில் இருந்துதான் சத்தியமங்கலத்தில் உள்ள 27 வார்டுக்கும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.நகராட்சி தண்ணீரை சுத்தப்படுத்தி வினியோகம் செய்தாலும் பொதுமக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.