தினமணி 06.10.2010
கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் மா.சுப்பிரமணியன்
சென்னை, அக். 5: கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:
அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை விழிப்புடன் கண்காணித்து தவிர்க்க வேண்டும். அதில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். பிரதான சாலைகளில் மையத்தடுப்புகளின் அருகே உள்ள மண் அகற்றப்பட வேண்டும்.
மேம்பாலங்களில் உள்ள செடிகள், மண்கள் எவ்வித தொய்வின்றி அகற்றிட வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்கள், தார்க்கலவைகள் கொண்டு சரிசெய்திட வேண்டும். பூங்காக்களின் பராமரிப்பில் எவ்வித தொய்வின்றி கண்காணித்திட வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் அரசியல் சார்பற்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்திட வேண்டும்.
போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்ட 4 பிரதான சாலைகளில் எவ்வித தொய்வின்றி கண்காணித்து, களைய வேண்டும். சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடிகளை சரி செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பூங்காக்களையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், கல்வி அலுவலர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.