தினகரன் 08.10.2010
பள்ளபட்டி பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் தீவிரம்
அரவக்குறிச்சி, அக். 8: அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி பேரூராட்சி சார்பில் தெருக்களில் புகை மருந்து அடித்து கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கோடை காலம் முடிந்து மழைக்காலம் காலம் தொடங்கியுள்ள இந்நிலையில், ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் சாக்கடைகளில் கொசு உற்பத்தியாகும். இதன் மூலம் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பொதுமக்களை தாக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக நோய் பரவுதலை தடுக்கும் வகையில், பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது ஆலோசனையின்படி பள்ளபட்டி பேரூராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் கொசு ஒழிப்பு மருந்துப் புகை அடிக்கும் இயந்திரம் மூலம் தெருக்களில் அடிக்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது பார்வையிட்டார். பேரூராட்சி உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஜாபர்அலி, பிச்சை, ஜமால் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.