தினமணி 08.10.2010
மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை
கோவை,அக். 7: தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக வந்த புகாரை அடுத்து, மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில், தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக பொது மக்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனர். சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் லேபிள்கள் முறையாக ஒட்டப்படாதது கண்டறியப்பட்டது. குடிநீரில் சுகாதாரக் குறைபாடு உள்ளதா என அறிய, தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தண்ணீரின் தரத்தில் குறைபாடு இருப்பது உறுதியானால் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.