தினமணி 12.10.2010
கொசுத் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை தேவை
விருதுநகர், அக். 11: விருதுநகரில் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் குப்பைகளால் கொசுத் தொல்லைகள் அதிகரித்துள்ளதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விருதுநகர் நகராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். ஆணையர் ஜான்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் விவாதம், தலைவர் பதில் வருமாறு:
இந்திரா: 36-ம் வார்டில் தெருவிளக்குகள் எரியவில்லை. விளக்குகள் எரிய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பாலகிருஷ்ணன்: தெருவிளக்குகளைப் பராமரிக்க ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது எனக் கடந்த கூட்டத்தில் தெரிவித்தனர். ஆனால் நகரில் பல இடங்களில் இன்னும் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. எனவே கூடுதலாக ஆள்களை நியமிக்க வேண்டும்.
கார்த்திகா கரிக்கோல்ராஜ் (தலைவர்): ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. தினசரி வேலை ஆள்களும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி வர மறுக்கின்றனர். இங்குள்ள எலெக்ட்ரிசியன்கள் மின் கம்பம் ஏற மறுக்கிறார்கள். புதிய ஆள்களை நியமிக்க நிதி ஆதாரம் இல்லை. மேலும் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. எனவே மின்வாரியம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயக்குமார்: தெருவிளக்குகள் சம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு அனுமதியுடன் ஆள்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் ஜான்சன்: வருவாய் அதிகமுள்ள நகராட்சியில் மட்டும் சிறப்பு நியமனம் செய்து கொள்ள அனுமதி உண்டு. எனவே தாற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும்.
சுவேதா: எனது வார்டில் குப்பை, கழிவுநீர் தேங்கி தெருக்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருந்து வருகிறது. பலமுறை சுகாதாரப் பணியாளர்களை அழைத்து அவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் ஆள்கள் பற்றாக்குறை எனக் கூறி இன்னும் அப்புறப்படுóத்தாமல் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் இடமாக உள்ளது. தற்போது தெருக்களில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
பவுன்ராஜ்: எனது வார்டில் இது போலவே கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே உள்ளது.
கார்த்திகா கரிக்கோல்ராஜ் (தலைவர்): இந்தப் பிரச்னைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகள் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் முடிந்ததும் குடிநீóர் குழாய் இணைப்பு வழங்கப்படும். சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ 9 கோடி வந்துள்ளது. எனவே விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும்.